திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இஸ்லாத்தில் சாதி பேதங்கள் இல்லை என்கின்றீர்கள்? ஷியா, கன்னி, ஷாபி, ஹனபி, ராவத்தர், மரக்காயர் என்று கூறிக் கொள்வதேன்?

ஷியா, சுன்னி என்பது அரசியல் கருத்து வேறுபாட்டின் காரணமாக ஏற்பட்ட பிரிவுகளே தவிர இஸ்லாமியக் கொள்கை கோட்பாட்டின் அடிப்படையிலான பிரிவு அல்ல. நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் அவர்களது மருமகனார் அலி (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களின் வாரிசுகளுமே ஜனாதிபதி பதவிக்கு தகதியுடையவர்கள் என்று வாதிட்ட கூட்டத்தினர் ஷியாக்கள் ஆவார்கள். இந்த வாதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்னும் கூற்றின் அடிப்படையில் ஷியாக்கள் அல்ல நாங்கள். நாங்கள் சுன்னத் வல்ஜமாஅத்தவர் என்று பிரித்தறிவித்தவர் அஹமது இப்னு ஹன்பல் (ரலி) ஆவார்கள்.

இன்னும் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி. சைதி, லைதி இவைகள் எல்லாம் சாதிகளோ சாதிகளுக்கு ஒப்பான பிரிவுகளோ அல்ல. இவைகள் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை தொகுத்து வழங்கிய சட்ட மேதைகளின் பெயர்கள் ஆகும். இத்தகைய சட்ட மேதைகள் நூற்றுக்கணக்கானோர் உண்டு. அனைவரும் சம அந்தஸ்து உடையவர்களே. முஸ்லிம்களில் சிலர் அவர்களின் சட்ட நூலை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தங்களின் அறியாமையின் காரணமாக தங்களை ஷாபிகள் என்றும், ஹனபிகள் என்றும் கூறிக் கொள்கின்றனர். அதனால் அவைகள் மாற்றார்களுக்கு போல் தோற்றமளிக்கின்றன.

மரைகாயர் (மரக்கலம் ஆயர்) என்றால் கடல் கடந்து வாணிபம் செய்பவர். ராவுத்தர் என்றால் குதிரை வியாபாரம் செய்பவர் ஆவார். மரைக்காயர், ராவுத்தர் போன்ற பெயர்களுக்கும், இஸ்லாத்திற்கும் யாதெரு தொடர்பும் இல்லை. குதிரையையும், கடலையும் பார்க்காதவர்கள் கூட தங்களை மரைக்காயர் என்றும், ராவுத்தர் என்றும் கூறிக் கொள்ளும் கூத்தும் உண்டு. இஸ்லாத்தில் செய்யும் தொழிலைக் கொண்டோ, பேசும் மொழியைக் கொண்டோ, தோலின் நிறத்தைக் கொண்டோ உயர்ந்தவர் ஆவதுமில்லை தாழ்ந்தவர் ஆவதுமில்லை. முஸ்லீம்கள் அப்படி கருதுவதுமில்லை.

'நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (41:33) என்கிறான் இறைவன். ஆகவே முஸ்லிம்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டுமே கூறிக் கொள்ள வேண்டும். அவர்கள் அறியாமையின் காரணமாக தங்களை ஷியாக்கள், கன்னிகள், ஷாபிகள், ஹனபிகள், இராவுத்தர்கள், மரைக்காயர்கள் என்று கூறிக் கொள்வதை மாற்றார்கள் ஜாதிகள் என்று தவறுதலாக புரிந்து கொண்டு விட்டனர் முஸ்லிம்களும் இத்தகைய பிரிவுப் பெயர்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக